செவ்வாய், 23 ஜூலை, 2013

பொன்னாங்கண்ணி

பொன்னாங்கண்ணிக் கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம்- போன்றவைகள் நீங்கி உடல் குளிர்ச்சிப் பெறும். 
         
பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
குடலில் அலர்ஜி உண்டாகி அவை மூலத்தை தாக்கி மூலநோய் ஏற்படும். இதற்கு சிலர் அறுவை சிகிச்சை கூட செய்துகொள்வார்கள். இந்த நிலை மாற பொன்னாங்கண்ணி கீரையுடன் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் சீரகம் சிறிது சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் படிப்படியாக குணமாகும். அப்போது புளி, காரத்தை தவிர்ப்பது நல்லது.

கூந்தல் வளர தினமும் பொன்னாங்கண்ணி தைலம் தயாரிக்கும் முறை பொன்னாங்கண்ணி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்தது - 20 கிராம், அருகம்புல் காய்ந்தது - 10 கிராம், செம்பருத்தி பூ காய்ந்தது - 10 கிராம் எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி பாட்டிலில் அடைத்து தினமும் உபயோகிக்கலாம்.

பொன்னாங்கண்ணிக் கீரை வாய் துர்நாற்றத்தை நீக்கும். இதயமும் மூளையும் புத்துணர்வாக்கும். மேனியை பளபளக்கச் செய்யும். நோய் காரணமாக பலவீனமடைந்தவர்கள் டானிக் போன்று இக்கீரையை உண்டு வர உடலில் ரத்த உற்பத்தி பெருகி நல்ல பலம் சேரும்.
அசைவம் தான் தேவை என்று இல்லை உடலை வலுப் படுத்த  பசலையும் ,பொன்னாங்கண்ணிக் கீரையும் போதுமானது .

பொன்னாங்காணி என்பது பொன் ஆம் காண் நீ. இதைக் கண்டால் உன் உடல் பொன்னாகக் காண்பாய் எனப் பொருள் பெறுகின்றது.

பொன்னாங்காணி இலைகளை ஒரு கைப்பிடியளவு எடுத்து அதிகாலையில் மென்று தின்று ஒரு டம்ளர் பால் குடித்து வர உடல்குளிர்ச்சி அடைந்து கண் நோய் குணமாகும். பார்வை தெளிவடையும்.

பொன்னாங்காணி இலையைக் கீரையாக உணவுடன் தொடர்ந்து உண்டு வர உடல் சூடு, மூலம் குணமாகும். கண் ஒளி பெறும்.

பொன்னாங்காணி இலைச்சாறு, நல்லெண்ணெய் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து அத்துடன் அதிமதுரம், கோசுடம், செங்கழு நீர்க்கிழங்கு, கருஞ்சீரகம் வகைக்கு 20 கிராம் எடுத்து பாலில் அரைத்துப் போட்டு சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி 4 நாளுக்கு ஒருமுறை தலை முழுகிவர உட்காய்ச்சல், உடல்சூடு, கைகால் உடல் எரிச்சல், மண்டைக் கொதிப்பு, கண் எரிச்சல், உடம்புவலி, வயிற்றுவலி குணமாகும்.

பொன்னாங்காணி வேர் ஒரு எலுமிச்சைப் பழம் அளவு எடுத்து அரைத்து எருமைப் பால் 2 படியில் கலக்கிக் காய்ச்சி தயிராக்கிக் கடைந்து எடுத்த வெண்ணெயை 3 நாள் காலையில் சாப்பிட்டு மோரையும் தாகத்துக்குக் குடித்து வர இரத்தம் கலந்து சிறுநீர் போகுதல் குணமாகும்.

பொன்னாங்காணியை உப்பு இல்லாமல் வேக வைத்து வெண்ணெயிட்டு 40 நாளுண்ண கண்ணில் உண்டாகும் நோய் நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக