வியாழன், 5 செப்டம்பர், 2013

துத்திக் கீரை


துத்திக் கீரை உஷ்ணப் பிரதேசங்களில் நன்கு பயிராகும். மொத்தம் 20 வகையான துத்தி இனங்கள் உள்ளன. துத்திக் கீரையின் இலை, பூ, காய், முதலிய பாகங்கள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
துத்திக் கீரை இது சிறுநீரைப் பெருக்கும், மலத்தை இளக்கும். உடலுக்கு ஊட்டமளிக்கும். இக்கீரை குறிப்பிட்ட நோய்களைத் தீர்க்கும் தன்மை கொண்டது. உடலுக்கு ஊட்டமளிப்பதால் நோய் எதிர்ப்புச்சக்தியை உண்டாக்கிப் பல நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
மூலநோய், கட்டிகள், புண்கள், முழுமையாக நிவாரணம் பெறுகின்றன. எலும்பு முறிவுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. துத்திக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
மற்ற கீரைகளைக் கடைவது போல துத்திக் கீரையையும் பாசிப் பருப்பு அல்லது துவரம் பருப்பு சேர்த்து, கடைந்து சாப்பிடலாம். துத்திக் கீரையைத் தினமும் ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் எந்தப் பிணியும் அணுகாது. தேவையான சக்தியும் கிடைத்து விடுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள், உடல் சூடு உள்ளவர்கள், ஆசனத்தில் கடுப்பு உள்ளவர்கள், மேகச் சூடு உள்ளவர்கள் துத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிடுவதால் மேற்கண்ட பிணிகளில் இருந்து நிவாரணம் அடையலாம்.
துத்திக் கீரையை மருந்தாகத் தயாரித்துச் சாப்பிட்டால் முழுமையான நிவாரணம் பெறலாம்.
துத்தி இலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து கஷாயம் தயாரித்து, இதில் பாலும் சர்க்கரையும் சேர்த்து, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேகச்சூடு தணியும்.
துத்தி இலை, வெங்காயம், பச்சைப் பயறு சேர்த்து வேக வைத்துக் கடைந்து உணவு சாப்பிடும்போது சேர்த்துச் சாப்பிட்டால் மூலச் சூடு தணியும்.
துத்தி இலையை அரைத்து முகப்பருக்களின் மேல் போட்டாலும், துத்தி இலையைக் காய விட்டு அரைத்துப் போட்டாலும் சில தினங்கள் உபயோகத்தில் பருக்கள் மறைந்துவிடும். துத்தி இலையை ஆமணக்கு எண்ணெயில் வதக்கி ஆசனவாயில் வைத்துக் கட்டினால் மூலக் கட்டிகள் உடைந்து மூல ரணங்கள் ஆறிவிடும். மூல நோய் அகன்று விடும். பால்துத்தியை தண்ணீர் விடாமல் அரைத்து வெட்டுக் காயத்திலும் அடிபட்ட காயத்திலும் வைத்துக் கட்டினால் காயங்கள் விரைவில் ஆறிவிடும். பால்துத்தியின் அடையாளம் காண பால்துத்திக்காயின் மேல் தண்ணீர் தெளித்தால் வெடிக்கும்.
துத்தி இலையையும் துத்திப் பூவையும் சம அளவில் எடுத்து, மை போல் அரைத்து மூலப் பருக்களின் மேல் போட்டால் பருக்கள் மறையும். பருக்களினால் ஏற்பட்ட வீக்கம், வலிநீங்கி பருக்கள் மறைந்து விடும்.
உடம்பில் எந்தப் பாகத்திலாவது வீக்கம், வலி இருந்தால் இதே மருந்தைப் போட்டுவர குணம் ஏற்படும்.
துத்தி இலையை இடித்துச் சாறு தயாரித்து இதற்குச் சமமாக நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அஜீரணத்தால் ஏற்பட்ட வயிற்றுப் போக்கு குணமாகும்.
துத்தி இலை அல்லது துத்தி வேரை 35 கிராம் எடுத்து 250 மில்லி தண்ணீரில் போட்டு பாதியாகச் சுண்டக்காய்ச்சி காலை, மாலை 60 மில்லி வீதம் சாப்பிட்டு வந்தால், வெள்ளை நோயும், வெட்டை நோயும் குணமாகும்.
துத்திவேரின் மேல்பட்டையை நன்றாக அரைத்து, நல்லெண்ணெயில் கலந்து, நன்றாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு முகப்பருக்களுக்குத் தடவினால் முகப்பரு நீங்கி விடும்.
துத்தி விதையை 10 கிராம் அளவில் எடுத்து பால் விட்டு நன்றாக அரைத்து, பிறகு தேவையான அளவில் பால் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகும். தொழுநோயின் ஆரம்பத்தில் இப்படிச் சாப்பிட்டால், மேற்கொண்டு நோய்முற்றாமல் தடுத்துவிடும். துத்தியின் மூலம் சேகரித்து, 100 கிராம் அளவில் எடுத்து 300 மில்லி தண்ணீரில் போட்டு பாதியாகச் சுண்டக் காய்ச்சி தினசரி சாப்பிட்டு வந்தால், காமாலை நோய் குணமாகும் நீர்ச் சுருக்கு நீங்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் புண் குணமாகும். தொண்டை தொடர்பான நோய்கள் இருக்காது. சொறி, சிரங்கு, பத்து, படை, அரிப்பு நீங்கி விடும்.
துத்திப் பூவை ஒரு கைப்பிடியளவு சேகரித்து, பசும்பாலில் போட்டுக் காய்ச்சி சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடல் வெப்பம் தணியும். தாது விருத்தி ஏற்படும். விந்து கூடுதலாக உற்பத்தியாகும்.
துத்தி இலையை நிழற்பாடமாகக் காயவைத்து பொடிசெய்து வைத்துக் கொண்டு, இந்தப் பொடியைக் காலை மாலையாக ஒரு தேக்கரண்டித் தூளைச் சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்து வந்தால் மூலம், ரத்த மூலம் மூலப் புண்கள், மூலக் கடுப்பு முதலிய பிணிகள் முற்றிலுமாக அகலும். நோய் தீர சில தினங்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
இதே சூரணத்தைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், பல பிணிகளில் இருந்து முன் தடுப்பாகச் செய்து கொள்ளலாம். மூன்று தினங்களும் காலை, மாலை சாப்பிட்டால் போதுமானது.
துத்திப் பூவை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு, ஒரு தேக்கரண்டிப் பொடியில் பால், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால், இரத்த வாந்தி நின்று விடும். உடல் வெப்பம் நீங்கும். தேகம் குளிர்ச்சியடைந்து விடும். நரம்புத் தளர்ச்சி நீங்கி விடும். உடல் போஷாக்கு அடைந்து ஆரோக்கியமான, திடகாத்திரமான உடல் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
துத்தி விதையைப் பொடி செய்து 10 கிராம் அளவில் எடுத்து 120 மில்லி காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடம்பில் ஏற்பட்ட கருமேகம், படர்தாமரை நீங்கும்.
இரத்த சுத்தி ஏற்படும். இரத்த விருத்தி ஏற்படும். விந்து உற்பத்தி அதிகரித்து போக சக்தியை மேம்படுத்தும்.
துத்தி இலை, துரா இலை, வெங்காயம் இம்மூன்றையும், சம அளவில் எடுத்து, சிறு சிறு பொடியாக அரிந்து சித்தாமணக்கு எண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு விட்டு, இதே மருந்தை ஆசன வாயில் வைத்துக் கட்டி வந்தால் ஆசனக் கடுப்பு நீங்கும்.
துத்தி இலையை அரைத்து ஒரு எலுமிச்சங்காய் அளவில் தயாரித்து எருமைத் தயிரில் குழப்பி பூ 5 நாள் சாப்பிட்டால், சிறு நீரில் இரத்தம் கலந்து வந்தால் உடனே நிற்கும். இதற்குக் காரணமான வெட்டை நோய் தீர்ந்து விடும்.
துத்தி விதையைக் காலையில் 10 கிராம் அளவில் ஊறவைக்க வேண்டும். இதை மாலையில் சிறிது கற்கண்டு சேர்த்துச் சாப்பிட வேண்டும். இதே போல் மாலையில் ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிட வேண்டும். இவ்வாறு சில தினங்கள் சாப்பிட்டால் இரத்தபேதி, வயிற்றுக் கடுப்பு, நீர்ச்சுருக்கு, நீர்த்தாரை ரணங்கள், வயிற்றில் தொடர்ந்து ஏற்படும் எரிச்சல் முதலிய நோய்கள் தீரும்.
துத்தி விதையைப் பாலில் ஊறவைத்து கற்கண்டு சேர்த்துச் சில தினங்கள் சாப்பிட்டால், சூட்டினால் ஏற்பட்ட இருமல் தீரும்.
வட்டத் துத்தி இலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து இதில் நெய் சிறிதளவு சேர்த்து மூன்று தினங்கள் சாப்பிட்டால் மூலமுளை கரைந்து விழுந்து விடும்.
துத்தி இலையை இடித்துச் சாறு பிழிந்து சம அளவு நெய் சேர்த்து 30 மில்லி அளவு சாப்பிட்டால், கடுமையான ஜலதோஷம் குணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக