வெள்ளி, 28 ஜூன், 2013

கஷாயம்!

வீட்டில் அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யும் இந்த கஷாயம் உடல்வலி, ஜலதோஷம், தொண்டை கரகரப்பு இப்படி எல்லா தொல்லைகளுக்குமே மிகவும் ஏற்ற ஒரு மருந்து.  இந்த பிரச்சனைகள் ஆரம்பிக்கும் போதே இந்த கஷாயத்தை போட்டுக்  குடித்து விட்டால் பிரச்சனைகள் குறையும். ஜாஸ்தி தொந்தரவு இருந்தால் பின்பு மருத்துவரிடம் சென்று விடுங்கள். அஜாக்கிரதையாக இருக்க கூடாது.

தேவையான பொருட்கள் :-

சுக்கு (அ) இஞ்சி ஒரு விரல்நீளத் துண்டு
தனியா – 2 தேக்கரண்டி
மிளகு – ½  தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
துளசி இலைகள் சிறிதளவு
கற்பூரவல்லி (அ) ஓமவல்லி இலைகள் சிறிதளவு
சர்க்கரை (அ) பனங்கல்கண்டு தேவைக்கேற்ப.

செய்முறை :-

மிக்சி ஜாரில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களான இஞ்சி, தனியா, மிளகு, சீரகம், துளசி, கற்பூரவல்லி ஆகியவற்றை போட்டு மைய அரைத்து எடுக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைக்கலாம். துளசி மற்றும் கற்பூரவல்லி ஆகியவை விருப்பம் தான். இருந்தால் அதாவது கிடைத்தால் சேர்த்துக் கொள்ளலாம் இல்லையெனில் கவலைவேண்டாம். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி நன்கு கொதிக்க விடவும். சிறிது நேரத்திற்கு பிறகு தண்ணீர் சிறிதளவு சுண்டியதும் இறக்கி, சர்க்கரை அல்லது பனங்கல்கண்டு சேர்த்து கரைந்ததும் வடிகட்டி பருக கொடுக்கலாம்.

குடித்த சிறிது நேரத்திலேயே புத்துணர்ச்சி கிடைக்கும். என்ன நீங்களும் செய்து பார்ப்பீர்கள் தானே….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக