சனி, 14 அக்டோபர், 2017

அல்சரை போக்கும் அகத்திக்கீரை





அகத்தி என்றாலே முதன்மை, முக்கியம் என்று பொருளாகும். நமது அகத்தில் உள்ள கழிவுகளை அகற்றுவதால் இது அகத்தி என்று பெயர் பெற்றுள்ளதாம். தமிழ்நாட்டில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் மறுநாள் துவாதசி அன்று இறைவனை வணங்கி உண்ணும் உணவில் அகத்திக்கீரை முக்கிய உணவாக இடம் பெறுகிறது. இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. பெரும்பாலும் அகத்திச்செடி நீர் தாங்கிய பூமிகளில் பயிர் செய்யப்படுகிறது. சத்துக்கள் அகத்திக் கீரையில் 73 சதவிகிதம் நீரும், 8.4 சதவிகிதம் புரதமும், 1.4 சதவிகிதம் கொழுப்பும், 2.1 சதவிகிதம் தாது உப்புகளும் இருக்கின்றன. இதில் 2.2 சதவிகிதம் நார்சத்தும் இருக்கிறது. மாவுச்சத்து 11.8 சதவிகிதமும் உள்ளது. சுண்ணாம்புச்சத்து இக்கீரையில் அதிக அளவில் உள்ளது. இது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
இக்கீரை உயிர்ச்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். 100 கிராம் கீரையில், 9 ஆயிரம் உயிர் சத்தான வைட்டமின்கள் உள்ளது. தயாமின் சத்து 0.21 மில்லி கிராமும், ரைபோம் ஃப்ளோவின் சத்து 0.09 மில்லிகிராமும், நிக்கோடினிக் அமிலம் 1.2 மில்லிகிராமும், வைட்டமின் ‘சி‘ 169 மில்லி கிராம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பயன்கள்
அகத்திக்கீரையில் இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றன. இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையது. குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு, தொண்டைப்புண் மற்றும் தொண்டைவலி, தோல் நோய்கள் போன்றவற்றிற்கு இக்கீரையை சாப்பிடுவதன் மூலம் குணமாகும்.

மருத்துவ பயன்கள்

அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்கும்போது தொண்டைப் புண், தொண்டை வலி ஆகிய நோய்கள் நீங்கும். ரத்த பித்தம், ரத்த கொதிப்பு, ஆகியவை அகத்திக்கீரையை சாப்பிடுவதால் அகலும்.

பித்தம்:
 அகத்திக்கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ, ஆகியவற்றைக் குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.
அரிப்பு: 
அகத்தி மரப்பட்டை, வேர்ப்பட்டை வகைகளை கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு சுண்டக்காய்ச்சி அதனை வடிகட்டி 100 மி.லி. அளவு என 2 வேளை குடித்து வர காய்ச்சல், கை கால், மார்பு, உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைக் காய்ச்சல் குணமாகும்.
காய்ச்சல்: 
இக்கீரையைப் பிழிந்து அதன் சாறை 2 துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பிக்க கடுமையான தலைவலி, சளி, ஜலதோஷம் போன்றவை நீங்கும்.


பால் சுரக்க: 
இக்கீரையில் சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ அதிகளவு உள்ளது. பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும். இக்கீரை சமைக்கும்போது நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. இதன்மூலம் மலச்சிக்கல் நீங்கும். குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை 5க்கு ஒரு பங்கு வீதம் தேன் கலந்து தலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும்.

காயம்: 
அகத்தி கீரையை வேக வைத்து அரைத்துக் காயங்களுக்கு கட்ட விரைவில் ஆறும். அகத்திப் பூச்சாறை கண்களில் பிழிய கண்நோய் குணமாகும்.


அல்சர்:
 அகத்தி கீரை வயிற்றுப் புண் (அல்சர்) என்னும் நோயைக் குணப்படுத்தும். இதற்கு அகத்திக்கீரையை நன்றாக கழுவி இதில் 4 பங்கு சின்ன வெங்காயத்தை சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினமும்  1 வேளை குடிக்கலாம்.

கால்வெடிப்பு: 
அகத்தி கீரையையும், மருதாணி இலையையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப்போட்டால் வெடிப்புகள் மறையும்.


தேமல்:
உடம்பில் காணப்படும் தேமலுக்கு அகத்தி கீரையின் இலையை தேங்கா எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும். அகத்தி கீரை சாற்றை சேற்று புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும்.

குறிப்பு: அ
கத்திக்கீரை மருந்து முறிவு கீரையாகும். பிற நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் அகத்திக்கீரையை சாப்பிடக்கூடாது. மேலும் இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்தம் கெட்டுப்போகும் வாய்ப்புண்டு. இதனால் சொறி, சிரங்கும் தோன்றலாம். ரத்தம் குறைந்து ரத்த சோகை ஏற்பட்டு, வயிற்று வலியும் உண்டாகும். இக்கீரையை வாரத்துக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால், நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக