வியாழன், 27 மார்ச், 2014

அரிசி வகைகளும் அதன் குணங்களும்

நமது நாட்டில் முக்கிய உணவாக அரிசியால் ஆன சோறு, அரிசி மாவில் செய்யப்படும் இட்லி, தோசை போன்றவையே இருக்கிறது. இப்படி அதிகம் பயன்படுத்தப்படும் அரிசியின் வகைகளையும், அதன் குணங்களையும் பார்ப்போம். 

கார் அரிசுயை நமது உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நல்ல உறுதியடையும். தசைகள் நல்ல முறையில் வளர்ச்சி பெறும். உடலின் தோற்றத்திலும் கவர்ச்சி தோன்றும். சருமம் மெம்மையாகவும் பட்டுப் போலவும் அமையும். 

குண்டு சம்பா அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் நாவறட்சியைத் தீர்க்கும். ஆனால் இந்த வகை அரிசி கரப்பான் பினியை உண்டாக்கக் கூடும். பசியை மந்திக்கச் செய்யும். 

குன்றுமணிச் சம்பா அரிசியில் வாதக் குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு. விந்தைப் பெருக்கும். உடல் வன்மையைப் பெருக்கும். 

சீரகச் சம்பா சிறுவாத நோய்களைக் குணமாக்கும், பசியை அதிகரிக்கும். 

செஞ்சம்பா சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களை உண்டாக்கும். பசியை அதிகரிக்கச் செய்யும். 

கோடைச் சம்பா அரிசி வாதப்பித்த சிலேட்டும நோய்களைக் குணப்படுத்தும். உடலிற்கு நல்ல குளிர்ச்சி இயல்பைத் தரும். 

ஈர்க்கு சம்பா சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கண்களின் நலனுக்கு இது மிகவும் சிறந்தது. சிறிதளவு பித்தக் கோளாறுகளை உண்டாக்கக் கூடும். 

பச்சரியைச் சாப்பிட்டால் வாதக் குறைபாடுகள் உண்டாகக்கூடும். பக்கவாதம், உடல் உறுப்புகளில் சுரணையற்ற தன்மை ஏற்படக்கூடும். பித்த எரிச்சலை விலக்கும், உடல் வன்மையைப் பெருக்கும். 

புழுங்கல் அரிசி எல்லா வயதினருக்கும், எல்லா தரத்தினருக்கும் உகந்தது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றது. அரிசியின் முழுச் சத்தும் வீணாகாமல் தருவது புழுங்கல் அரிசிதான். மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது புழுங்கல் அரிசிதான். 

சாமை அரிசியும் புன்செய் தானியங்களில் ஒன்றுதான். இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும். உடலை நல்ல வலிமையாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. 

தினை அரிசியும் புன்செய் தானியம்தான். சளித்தொற்றை போக்கும். காய்ச்சல் வேகத்தைத் தணிக்கும். இரத்த சோகையை அகற்றும். ஆனால் அதிகம் சேர்த்துக்கொண்டால் பித்தம் அதிகரிக்கும். 

திப்பிலி அரிசி விந்தினை வளர்க்கும், மேக நோயைக் குணமாக்கும், வாதக் கோளாறுகளைப் போக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக